முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சின்ன சின்ன ஆசை! சிறகடிக்கும் ஆசை....!

எல்லோருக்கும் இருக்கும் ஆசை தான். அப்படிச் சொன்னால் சரியாக இருக்காது. எல்லோருக்கும் இருக்குமா இந்த ஆசை என்று தெரியவில்லை, ஆனால், நிச்சயமாக பெரும்பாலானோருக்கு இருக்கும் என்று நம்புகிறேன் (சரி, யாருக்கு இருக்குதோ இல்லையோ, எனக்கு இருக்குது, இருந்தது!).

எவ்வளவு ஆசையோ, அவ்வளவு பயம்! ”என்னதான் ஆசை!” என்கிறீர்களா? இந்நேரம் தலைப்பை வைத்தே புரிந்து இருக்கும், இருந்தாலும் சொல்வது அடியேனின் கடமை! விமானத்தில் பறப்பது! ம்ம், எல்லோருக்குமே இருக்கும் ஆசை தானே! அடிக்கடி பறப்பவர்களுக்குப் பறந்தவர்களுக்கு இருக்காது, என்னைப் போல பறக்க வாய்ப்பே (சிலருக்குப் பணமும்) இருந்திராதவர்களுக்கு இருக்கும்! நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள், ”பணமா இல்ல, மதுரையில இருந்து சென்னைக்கு flightல போலாமே...?” என்று, ”வாஸ்தவம் தான், அப்பாகிட்ட கேட்டா கூட்டிட்டுப் போவாங்க தான், பணம் தருவாங்க தான்...” ஆனால், ட்ரெயின், பஸ் என்று 400 ரூபாய்க்குப் போகும் இடத்தில் பல ஆயிரம் கொடுத்துப் போக மனம் ஒருபோதும் வந்ததில்லை, ஒவ்வொரு பைசாவும் அப்பா சம்பாத்தியம் ஆயிற்றே! (மேலும், சாப்பாடு தவிர்த்து வேறு எதற்கும் அதிகம் செலவு செய்யப் பிடிக்காது எனக்கு! சாப்பாட்டு ராமி :P சாப்பாட்டுக்கு மட்டும் கணக்கு வழக்கு கிடையாது! Flightல் செல்லும் பல ஆயிரத்திற்கு பல நாட்கள் சாப்பிடலாமே என்று கணக்குப் போடும் ஆள், நான்)

இன்னும் வேலைக்குப் போகவில்லை, சம்பாத்தியம் இல்லை! ஆனாலும், நானே சம்பாதித்துப் பறக்க வேண்டும்! எப்படியோ, ஒரு வழியாக அமெரிக்காவில், மிசிகனில் (Michigan State) ஒரு பல்கலைக்கழகத்தில் (Michigan State University, East Lansing) இரண்டு மாதம் இன்டேர்ன் (Intern) ஆக இருக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டேன். (இந்த fellowship பற்றி அறிய, ”இங்கே” செல்லவும்!) பறக்கும் செலவில் இருந்து எல்லாம் அவர்களே கொடுத்துவிடுவார்கள் (ஆஹா, வேற என்னய்யா வேணும்). அடுத்து இப்போது அமெரிக்காவில் நான் போகும் இடத்தில் ஜூன், ஜூலை, ஆகசஸ்ட் மாதங்களில் வெதர் (weather) எப்படி இருக்கும் என்று ஆராயத் தொடங்கினேன் (ஆராய-னு சொன்னதும் பெரிய ஆராய்ச்சி போலனு நெனைக்க வேணாம்! எல்லாம் Google தான் :P)

அப்படியே, எப்படி மக்கள், இடம், சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் என்று பலவாறு பல பொழுதுகள் என் ஆராய்ச்சி தொடர்ந்தது. பிறகு விசா (VISA) வாங்கும் பணியைத் தொடங்கினேன். இணையத்தில் எளிதில் முடிந்தது அப்ளிகேசன் வேலைகள் எல்லாம். பிறகு இரண்டு நாட்கள் நேரில் செல்ல வேண்டி இருந்தது - ஒரு நாள் போட்டோ, கைரேகை எடுக்க; இன்னொரு நாள் இன்டெர்வியூ. இன்டெர்வியூ என்றால் படிப்பு சம்பந்தமாக பயங்கரமான கேள்வி எல்லாம் கேட்கமாட்டார்கள். ”ஏன் போகிறோம், எதற்குப் போகிறோம்”?, போன்ற எளிய கேள்விகள் தான். (மொதல்ல இண்டெர்வியூனு சொன்னதும் நானு அப்படியே ஷாக் ஆகிட்டேன் :P)

விசா கிடைத்தாயிற்று, அடுத்து? பெட்டி கெட்டும் வேலை! என் அப்பா கேளியாக, ”மஞ்சப்பை கொண்டு போ... இல்லனா இரும்புப் பெட்டி...”, என்றார். இப்படி கிண்டல் கேளிக்கு நடுவே ”என்ன எடுத்துச் செல்லலாம், என்ன கூடாது’, என்ற கூகுள் ஆராய்ச்சி தொடர்ந்தது...

Lufthansa Economy
டிக்கெட் புக் செய்து அனுப்பி இருந்தார்கள். Lufthansa விமானத்தில் டிக்கெட், சரி அந்த விமானத்தைப் பார்ப்போம் என்று அந்த ஏர்லைனின் வெப்சைட்டிற்குச் சென்றேன். என் நேரம், அன்று பார்த்து அந்த ஏர்லைனின் ஏதோ விமானம் விபத்துக்குள்ளாகி இருக்க, அதைப் போட்டு இருந்தார்கள் அந்த வெப்சைட்டிற்குள் நுழையும் முன்பே ”கருப்புப் பக்கம்” ஒன்றில்! சொல்லவும் வேண்டுமா?? ஏற்கனவே பெரிய பயந்தாங்கொளி, இது இன்னும் பீதியைக் கிளப்பியது! ஒரு வேளை நாம போறப்பவும் வெடிச்சிட்டா?? :-O

எப்படியோ, சமாதானம் ஆகி, பொட்டி கட்டும் வேலையைத் தொடர்ந்தேன். எனக்கு மொத்தம் 60 கிலோ பொருட்கள் எடுத்துச் செல்லலாம் என்று இருந்தது டிக்கெட்டில், ’கொஞ்சமாக பேக்(pack) செய்வது நலம்’, என்று முடிவு செய்தேன்.

உடை! என்ன உடை அணிவது? உடன் படிக்கும் நண்பர்கள் பலரும் ”மினி ஸ்கர்ட், ஷார்ட்ஸ்,” என்று ஐடியா கொடுக்க, என்னால் அதை கற்பனை கூட செய்ய முடியவில்லை! அம்மா என்னடா என்றால், ”சுடிதார் கொண்டு போ... சேலை கொண்டு போ...” என்றார். நான் இரண்டுக்கும் நடுவாக, ஜீன்ஸ் பேண்ட்டும், டாப்ஸ்களும் எடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தேன். ஏற்கனவே கொஞ்சம் டாப்ஸ் இருந்தது என்னிடம், ஒரு நான்கு ஐந்து வாங்கினேன் புதிதாக. குளிருக்கு ஏற்றார் போல இருக்கும் உடை, ஷூ என்று எல்லாம் தயார்.

குறிப்பாக இன்னொரு மறக்கக் கூடாத விஷயம், ப்ளக் பாயிண்ட் அடாப்டர் (plug point adapter), இந்தியாவில் இருக்கும் சார்ஜர்கள் அமெரிக்காவில் சேராது, அதற்கு சிறிதாக ஒரு அடாப்டர் கிடைக்கும், அதைப் பொருத்தி நம் சார்ஜரையே பயன்படுத்தலாம். இதை நான் வாங்க வேண்டும், வாங்க வேண்டும் என்று கடைசி நேரம் வரை வாங்காமல், மறந்தே போய்விட்டேன், கடைசியில் இங்கு வந்திருந்த இன்னொரு இந்திய நண்பரிடம் வாங்கினேன், அது வரை லேப்டாப்பில் டேட்டா கேபிளை வைத்து சார்ஜ் ஏற்றிக் கொண்டு இருந்தேன்.

எல்லாம் தயார், அத்தை – மாமா, சித்தி – சித்தப்பா, பெரியம்மா - பெரியப்பா என்று எல்லா சொந்தங்களுக்கும் நேரிலும் அலைபேசியிலும் சொல்லிவிட்டு, கிளம்பினேன். இரவு இரண்டு மணிக்கு எனக்கு விமானம். பயம், சந்தோஷம், எல்லாம் கலந்த ஒரு உணர்வு. விமான நிலையம் வாசல் வரை தான் அம்மா அப்பாவை அனுமதித்தார்கள், அவர்களுக்கு ஒழுங்காக “டாட்டா” கூட போடவில்லை, பயத்தில் அங்கும் இங்கும் திரும்பிக் கூடப் பார்க்காமல் வந்துவிட்டேன். அம்மா வருத்தப்பட்டார், ஒழுங்கா டாட்டா கூட சொல்லவில்லை என்று. அவருக்கு ஏதோ தைரியமாக எஞ்சாய் செய்து கொண்டு போவது போலத் தெரிந்ததாம் என்னைப் பார்க்க, ”நீ இப்போவே இப்படினா, கல்யாணம் எல்லாம் செஞ்சு போனா சுத்தமா என்ன மறந்துடுவ போல...” என்று சோகமாகச் சொன்னார். அந்நேரம் எனக்கு இருந்த பயம், எப்படிப் போக வேண்டும் என்று தெரியாது, யாருக்குப் புரியும் சொன்னால் அந்த விநோத மனநிலை.

ஆனால், விமானத்தில் ஏறி கொஞ்ச நேரத்திலேயே எல்லாம் சரியாகிவிட்டது. சமாளித்துவிடலாம் என்று நம்பிக்கை வந்துவிட்டது. ”டேக்காஃப்” (takeoff) ஆகும் போது பயமாக இருக்குமோ என்று நினைத்தேன், சிலர் காது அடைக்கும் என்றெல்லாம் சொல்லி இருந்தார்கள், ஆனால், பெரிதாக எதுவும் செய்யவில்லை, காது மட்டும் லேசாக அடைத்தது போலத் தோன்றியது சில நேரம்.

விமானம் நன்றாக இருந்தது. ஜன்னல் சீட் தான் கிடைக்காமல் போனது... நடுவில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கையே பார்க்க முடியவில்லை. முன் இருக்கையில் ஸ்க்ரீன் இருந்தது, அதில் நிறைய படம் பார்த்தேன் மாற்றி மாற்றி, சாப்பிட வெஜ் wrap கொடுத்தார்கள், நன்றாக இருந்தது, சாப்பிட்டேன். டாய்லெட் மிகவும் சின்னதாக இருந்தது (பின்ன, பெருசாவா வைக்க முடியும்..?) “PUSH” என்று எழுதி இருந்தது, தள்ளினால் திறந்தது, உள்ளே தாழ் இருந்தது, அதை மூடினால் தான் லைட்(light) ஆன்(on) ஆனது, ஒரு அம்மா டாய்லெட் கதவை மூட மறந்துவிட்டார் போல, அடுத்து போனவர் திறந்துவிட்டார்! நல்ல வேலை நான் முதலிலேயே ஒழுங்காக ஆராய்ச்சி செய்து மூடிவிட்டேன்! (முதல் முறை போகும் போது எப்படி மூடுவது, திறப்பது என்று தெரியாமல் அந்த அம்மா போல ஆக நிறைய வாய்ப்பு இருக்கிறது, ஆதலால், கவனம்).

என் நண்பர்கள் எல்லாம் கேலியாக முன்பே சொன்னார்கள், டிஷ்யூ பேப்பர் எல்லாம் உபயோகித்துப் பழகிக் கொள் என்று, அர்த்தம் புரிந்தது. கஷ்டம் தான் இந்த டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பது. என் அம்மா சொன்னார், “வெறும் பேப்பர மட்டும் யூஸ் பண்ணி எதாவது இன்ஃபெக்‌ஷன்(infection) வந்துடாம... ஒழுங்கா தண்ணி யூஸ் பண்ணு...”, என்று. ஃப்லைட்டில் நினைத்தாலும் தண்ணீர் எல்லாம் யூஸ் பண்ண முடியாது!

விமானத்தில் எதோ ”டாக்ஸி டாக்ஸி” (taxi) என்று சொன்னார்கள், "டாக்ஸி ஆகும் போதும், சீட் பெல்ட் போட வேண்டும்" என்றெல்லாம், ”என்னடா அது டாக்ஸி, ஒருவேள எறங்குனதுக்கு அப்பறமா டாக்ஸில கூப்டு போவாங்களோ...?” என்று பார்த்தால், விமானம் தரையில் ஓடுவதைத் தான் அப்படிச் சொல்வார்கள் போல! நமக்கு எங்க அவ்வளவு அறிவு, இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

சென்னையில் கிளம்பிய நான், அடுத்து ஃப்ரான்க்ஃபர்ட்டில் (Frankfurt) (இது ஜெர்மனியில் இருக்கிறது என்று டிக்கெட் வந்த பிறகு தான் கண்டுபிடித்தேன்) வந்து சேர்ந்தேன். இங்கிருந்து, சிகாகோவிற்கு (chicago) அடுத்த விமானம். விமான நிலையம் அத்தனை பெரிது, ஒரு டெர்மினலில்(terminal) இருந்து இன்னொன்றிற்குச் செல்லவே ரயில் இருந்தது. அடுத்த விமானம் ஏற ரயிலில் போக வேண்டும் என்று சொன்னார்கள் விசாரித்த போது. ”என்னது??? நான் ஃப்லைட் ஏற கேட்டா, இவங்க ட்ரெயின் ஏற வழி சொல்றாங்க...”, என்று முதலில் கொஞ்சம் முழித்தேன், பிறகு சரி என்று அவர்கள் காட்டிய திசையில் ரயிலைத் தேடிப் புறப்பட்டேன். ரயில் ஏறும் இடத்தைக் கண்டுவிட்டேன், “அப்பாடா, பாத மாறிப் போகாம சரியா வந்தாச்சு...”, என்று நிம்மதியாக இருந்தது.

விமானத்தில் ஒரே குளிர், குடுத்து இருந்த போர்வையைப் போத்திய பின்னும் குளிர், எப்படியோ சமாளித்தேன்! ஒரு வழியாக சிக்காகோவிற்கு பத்திரமாக எந்த சேதாரமும் இல்லாமல் வந்து சேர்ந்தேன். அடுத்த இரண்டு மணி நேரத்தில் எனக்கு அடுத்த விமானம். வந்து இறங்கியதும் நேராக கஸ்டம்ஸிற்கு (Customs) அனுப்பினார்கள். அங்கே சென்றால் அதிர்ச்சி. ஏற்கனவே என்னுடைய அம்மா கொடுத்துவிட்ட “பிரியாணி மசாலா, ஃப்ரைட் ரைஸ் மசாலா, பாஸ்மதி அரிசி...”, எல்லாவற்றையும் தூக்கிக் குப்பையில் போட்டுவிடுவார்களோ என்று பயம், ஆனால், இங்கு கஸ்டம்ஸிற்கு வந்தவுடன் இன்னொரு பெரிரிரி....ய பயம். எனக்கு முன்னால் ஒரு இருநூறு பேர் நின்றார்கள்!!!. அடுத்த ஃப்லைட் ஏற நடுவில் இரண்டு மணி நேரம் கூட முழுமையாக இல்லை! எப்படிப் பிடிப்பேன் அடுத்த ஃப்லைட்டை? வரிசையில் போய் நின்றேன். இருநூறு பேரையும் அடுத்து என்னை அனுமதித்தார்கள். மறுபடி லக்கேஜை எடுத்து அடுத்த ஃப்லைட்டிற்கு செக் இன் செய்துவிட்டு வெளியே வந்த போது ஒரே சந்தோஷம், “ஹைய்ய்யா, மசாலா பொடி பாஸ்மதி அரிசி எல்லாம் தப்பிச்சிடுச்சு... குப்பைல போடல...”. என்னிடம் கேட்டார்கள் சாப்பிடும் பொருள் எதும் பெட்டியில் இருக்கிறதா என்று, “ நான் மசாலா எல்லாம் இருக்கு...”, என்று கொஞ்சம் தயங்கியவாறு சொன்னேன், “நல்ல மனுசன், அது பரவாயில்ல”னு சொல்லி அனுப்பிட்டாறு.

ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. எனது ஃப்லைட் போர்டிங் டைம் 5:12 மணி மாலை, ஆனால், நான் ஐந்து மணிக்கு தான் லக்கேஜ் செக்கின் முடித்து அடுத்து டெர்மினலுக்குச் செல்ல வழி தேடிக் கொண்டு இருந்தேன். ஒரு வழியாக கண்டுபிடித்துப் போனால், அடுத்து ஐந்து நிமிடம் கழித்து தான் அடுத்த ரயில் என்றார்கள், எனக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது, இந்த ஃப்லைட்டை விடப் போகிறேன் என்று.

அந்த காத்திருக்கும் ஐந்து நிமிடத்தில் ஊரில் இருந்தே வாங்கி வந்த மேட்ட்ரிக்ஸ் ஸிம் கார்ட் (Matrix Sim card) வேலை செய்கிறதா என்று பார்த்தேன். வேலை செய்தது, அப்பாவிற்கு கால் செய்து வந்துவிட்டதாக சொன்னேன். ஃப்லைட்டை விடப்போகும் செய்தியைச் சொல்லவில்லை. கொஞ்சம் நம்பிக்கை இருந்தது, எப்படியாவது ஓடிச் சென்றாவது பிடித்துவிடலாம் என்று (நாங்களாம் யாரு).

ரயில் ஏறி டெர்மினலுக்கு வந்தால், அங்கு இன்னொரு இருநூறு பேர்...! இந்த இருநூறு பேரையும் செக் செய்து உள்ளே அனுமதிப்பார்கள் போல, எப்படியும் குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். அவ்வளவு தான், முடிந்தது கதை!

ஏற்கனவே 5.20 ஆகி இருந்தது, எட்டு நிமிடம் லேட்! இருந்தாலும் முயலுவோமே என்று ஓடினேன். கூட்டத்தில் எல்லோரிடமும் எனக்கு நேரம் ஆச்சு ப்ளீஸ் வழி விடுங்க என்று டிக்கெட்டைக் காட்டி கேட்டு கேட்டு வரிசையில் முன்னே சென்றுவிட்டேன். எல்லோருமே வழி விட்டார்கள், ஒரே ஒருத்தன் மட்டும் முறைத்துக் கொண்டு விடவில்லை, போகிறான் என்று அவனுக்குப் பின்னால் சென்றேன். அவசரத்தில் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுக்க மறந்துபோனேன். ஸ்கேனர் அதைக் காட்ட, ”என்ன பாக்கெட்டில்?” என்று வேற ஒரு தரம் செக்கிங். கடைசியில் எல்லாம் முடிந்தது ஏறிவிடலாம் என்று பார்த்தால் இன்னும் ஒரு கால் மணி நேரம் உள்ளே நடந்து சென்றால் தான் என் கேட்(gate) வரும் போல, ஓடினேன், ஓடினேன், கேட்டின் எல்லை வரை ஓடினேன், அங்கே கேட் மூடப்பட்டு இருந்தால், மீண்டும் திரும்பிவிட்டேன் :P போர்டிங் முடிந்துவிட்டது என்றார்கள், அடுத்த ஃப்லைட்டில் போக முடியுமா என்று கேட்டேன், முடியும் என்று அடுத்த ஃப்லைட்டில் பாஸ் கொடுக்க, அடுத்த ஃப்லைட் எப்போ என்று பார்த்தால் இரவு ஒன்பது மணிக்கு. என்னைக் கூப்பிட ஏழு மணிக்கே வருமாறு சொல்லி இருந்தேன், பிறகு அவர்களுக்கு கால் செய்து, ”இப்படி இப்படி ஆகிடுச்சு”, பதினொரு மணிக்கு தான் வருவேன் என்று சொன்னேன்.

Michigan State University
அந்தத் தோழி (இங்கு வந்த பிறகு இப்போது நல்ல தோழி ஆகிவிட்டார்) மிகவும் நல்லவர், பரவாயில்லை, வருகிறேன் என்றார். சரி, இனி இரண்டு மணி நேரம் என்ன செய்ய? சுத்தினேன், வேடிக்கை பார்த்தேன், சாப்பிடலாம் என்று பார்த்தேன், ஆனால், என்ன சாப்பிட தனியாக என்று சாப்பிடவில்லை. ஒரு வழியாக வந்து சேர்ந்தேன், என்னைக் கூப்பிட வந்த தோழி சாப்பிட பழம், தண்ணீர், அமெரிக்காவின் அத்தியாவசிய தேவையான மற்றொரு பொருள் – அதான் இந்த “டிஸ்யூ பேப்பர்” எல்லாம் வாங்கி வந்து இருந்தார். அடடா, எவ்வளவு நல்லவர்! :)

எனக்காக வீடு பார்த்து முன் பணம் எல்லாம் கொடுத்து இருந்தார், வீட்டிற்கு கொண்டு போய்விட்டு, எல்லாம் விளக்கம் தந்து, மறுநாள் எப்படி கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்று எல்லாம் சொல்லி ஒரு மேப் (map) கொடுத்துவிட்டுச் சென்றார்.

இப்படியாக இனிதாக அமெரிக்கா வந்து சேர்ந்து, சில வாரங்கள் ஆகிவிட்டன. அமெரிக்க அனுபவங்கள் குறித்து அடுத்த பதிவுகளில் பார்ப்போம். :)

கருத்துகள்

  1. ஒரு பிளைட்டை மிஸ் பண்ணிட்டா அடுத்த பிளைட்டுக்கு டிக்கட் நாம காசு கொடுத்து எடுக்கணுமா?

    பிளக் பாயின்ட் அடாப்டர், பாஸ்மதி அரிசி, மசாலான்னு முன்னேற்பாடுகள் ரொம்பவே பக்கா...

    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. இல்ல, என்கிட்ட காசு எதுவும் வாங்கல, அடுத்த ஃப்லைட்ல போர்டிங் பாஸ் குடுத்தாங்க. பெரும்பாலும் தேவை இருக்காதுனு தான் நினைக்கிறேன் காசு குடுக்க. நன்றி :)

    பதிலளிநீக்கு
  3. வலைச்சரம் மூலம் உங்கள் பதிவிற்கு வந்தேன் வாழ்த்துக்கள். முதல் முறை விமானப் பயணம் மேற்கொள்பவர்க்கு ஏற்படப் போகும் இடையூறுகள் குறித்து இயல்பாகச் சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி :) வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

    பதிலளிநீக்கு
  5. Well written... Reminds me a bit about my very first flight 10+ years ago, excited but anxious that I did something similar to what you did, didn't say a proper goodbye to my family. Also, mine was a long stay (for my PhD) and so my parents were a bit emotional about the separation, so I almost ran into the airport not knowing how to deal with all that (added to my anxiety).

    பதிலளிநீக்கு
  6. நான் முன்னதாக ஒரு comment ல் சொன்னதுபோல அமெரிக்கா வில் உள்ள Sanfransico , California ,நியூயார்க், போகணும் னு தான் என் சிறு வயது முதல் இப்போ வரைக்கும் ,கனவு
    அதை பார்ப்பதற்காகவே நான் sillunu oru kaadhal movie ல வர Newyork நகரம் song ah அடிக்கடி பார்ப்பேன்......தோழி 😊

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நல்ல பாட்டு :) எனக்கும் பிடிக்கும்!

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்