முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இப்படியாக ஒரு பயணம்!

காலையில் இருந்தே ஒரே படபடப்பு, எந்த வேலையிலும் கவனமே செல்லவில்லை. மேலதிகாரி கொடுத்த வேலைகள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டே இருந்தேன், ஆயிரம் பிழைகளோடு! இப்படி அரையும் குறையுமாக முடிப்பதற்கு, அப்படியே போட்டுவிட்டு உட்காரலாம். ஆனால் என்ன செய்ய, சும்மா உட்கார்ந்தால் பார்ப்பவர்கள் ஏதாவது நினைப்பார்களே!

என்னவோ, “லொட்டு லொட்டு” என்று கணினியின் பொத்தான்கள் எல்லாவற்றையும் தட்டிக் கொண்டே இருந்தேன். மனம் மட்டும் அதே படபடப்பு நிலையில் லயித்துக் கிடந்தது!

சாயங்காலம் ஆறு மணிக்கு விடுதி அறையில் இருக்க வேண்டும். அப்போதான் கிளம்பி, ஒன்பது மணிக்கு ரயிலைப் பிடிக்க முடியும். ஆறு மணிக்கு அறையில் இருக்க வேண்டுமேயானால், ஐந்து மணிக்கு ஆஃபீசில் இருந்து கிளம்ப வேண்டும்! அது கொஞ்சம் கடினம்! கொஞ்சம் இல்லை, ரொம்பவே!

இது ஒரு காரணம் படபடப்புக்கு.

இந்தப் பெரிய ஊருக்கு நான் இரண்டு வருடம் பழசு. சென்னை! பிழைப்புத் தேடி, எல்லோரையும் போல நானும் வந்தேன். மாதம் பதினைந்தாயிரம் சம்பளம்!!! முதலில் ஐயாயிரத்தில் தான் ஆரம்பித்தேன், பிறகு படிப்படியாகக் கூடி, இப்போது இந்தப் பெரிய தொகை! இது எனக்குப் பெரிய தொகை தான். எனக்குத் தெரிந்து, இங்கு வேலை தேடி வந்து வேலையே கிடைக்காமல் இருப்பவர்கள் பலர், வேலை இருந்தும், இரண்டு, மூன்று ஆயிரம் மட்டும் ஊதியம் வாங்குவோர் பலர். இவர்களை எல்லாம் பார்க்கும் போது, பதினைந்து ஆயிரம், பெரிய்ய்ய்ய்ய்ய தொகை என்று, என்னை நானே தேத்திக் கொண்டேன்.

ஆனாலும், ஆழ் மனதிற்கும், அடுத்தவர் மனதிற்கும் இது மிகவும் சிரிய்ய்ய்ய்ய்ய தொகை என்பது நன்றாகவே தெரியும். போன மாதம் கடன் வாங்கி இருந்தேன், தங்கச்சியின் காலேஜ் ஃபீஸ் கட்ட, ஒரு இருபத்தி ஐந்தாயிரம். என்ன செய்ய, மாதம் என் செலவு போக, வீட்டுக்கு காசு அனுப்பியது போக, கையில் மிச்சம் இருப்பதே இல்லை! இந்த ஊர் என் காசை எல்லாம் ”ஆ”ப்போட்டு விடுகிறது!

கடன் வாங்கியதற்கு இன்று தான் வட்டி குடுக்கும் நாள். மூன்று மாதமாக வட்டியும் கொடுக்கவில்லை! இன்று கடன் கார அம்மா, விடுதி அறைக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றது (பொதுவாக மூத்தோரை மரியாதை இல்லாமல் "அது, இது" என்றெல்லாம் சொல்பவள் இல்லை நான், அந்தம்மா மிகவும் கடுமையாகப் பேசுவதாலோ என்னவோ மரியாதை கொடுக்க மனம் வருவதேயில்லை), ஆனால், என் கையில் காசே இல்லை! என்ன செய்ய? என்ன செய்ய?

இதுவும் ஒரு காரணம் படபடப்பிற்கு.

ஊருக்குப் போகமல் ரயில் டிக்கெட் பணம் எல்லாவற்றையும் மிச்சம் பிடிக்கிறேன் என்று இதுவரை ஊர் பக்கம் போயே இரண்டு வருடம் ஆகியாயிற்று. வந்ததில் இருந்து ஊர் பக்கம் போகவே இல்லை, ஃபோனில் பேசுவதோடு சரி. ஃபோனும் வாரம் ஒரு முறை தான், அதிலும் மிச்சம் பிடிக்கலாமே! இதுக்கு மேலும் மிச்சம் பிடித்தால், என் அம்மாவுக்கே என் முகம் மறந்து போகும் போல! அதுதான், இந்த முறை, "கடனின் வட்டியைக் கட்டாவிட்டாலும் பரவாயில்லை", என்று ஊருக்குக் கிளம்பிவிட்டேன்.

தீபாவளி நேரம், சென்னையே ஊருக்குப் போகும் நேரம்! பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஸன் என எல்லா இடமும் கூட்டம் இருக்கும் நேரம்! இந்தக் கூட்டத்தில் நானும் ஐக்கியம் ஆகி, ஊருக்குப் போக வேண்டும் என்று நினைத்தால் இன்னும் பெரிய்ய்ய்ய படபடப்பு! வைத்திருக்கும் நூறு இருநூறையும் யாராவது ஆட்டயப் போட்டுவிட்டால்?

இப்படியாகப் படபடப்பில் மாலை வரை ஓட்டிவிட்டேன், உருப்படியாக ஒரு வேலையும் பார்க்காமலே!

ஐந்து மணிக்கு என்னவோ காரணம் சொல்லி கிளம்பியும்விட்டேன்! ”ஆஹா, வெற்றி!”, என்று ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம், அந்தக் கடன்கார அம்மாவை நினைத்தாலே… “கிர்ர்ர்” என்று சுற்றியது!

அறைக்கு வந்துவிட்டேன் ஐந்தே முக்காலுக்கெல்லாம், கடன்கார அம்மாவைக் காணோம்! சரி சிறிது நேரம் கழித்து வருவார் என்று நினைத்தவாறே முகம், கை, கால் கழுவி உடை மாற்றி, ஊருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய புதுத் துணிகள், தங்கச்சிக்கு, அம்மாவுக்கு, அப்பாவுக்கு என வாங்கிய சிறு சிறு பரிசுகள் என எல்லாவற்றையும் எடுத்து வைத்து முடித்தேவிட்டேன், கடன்காரம்மாவைக் காணோம்???!!! அடடா, இப்போது என் முகத்தை நீங்கள் பார்க்க வேண்டுமே, புன்னகையும், பீதியும் கலந்த ஒரு “ரியாக்‌‌ஷன்”. கிளம்பி, அறையைப் பூட்டிவிட்டு, பக்கத்தில் இருக்கும் பறக்கும் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தேன்.

படபடப்பு இப்போது இன்னும் அதிகம்! பாதையில் அந்த அம்மா வந்துவிட்டால்? மானமே போகுமே! ”காசு குடுக்க வக்கில்ல எங்கடி போற மு… சிரிக்கி..”, என்பது போல ஏதாவது சொல்லித் திட்டிவிடுவாள்!

ஐயோ! என்ன செய்ய! வேகமாக நடக்கத் தொடங்கினேன். நடக்க என்பதைவிட, ஓடினேன்! என் பிழைப்பை நினைத்தால், எனக்கே பாவமாக இருந்தது! என்ன வாழ்க்கை!

இந்த ஊரில், ஆடம்பரமாகச் செலவு செய்பவர்களை எல்லாம் பார்த்தால், எனக்குப் பொறாமையாகத் தான் இருக்கும், சில நேரங்களில் கோவம் கூட வந்துவிடும்! இங்கு இருக்கும் ஃபீனிக்ஸ் மாலையும், ஈ.ஏ வையும் வெளியில் இருந்து மட்டும் தான் நான் வாயைப் பிளத்து பார்த்திருக்கிறேன். உள்ளே சென்று விண்டோ ஷாப்பிங் செய்யக் காசு தேவையில்லை என்ற போதும். அங்கு இருக்கும் பொருள்களின் பளபளப்பும், ஈர்ப்பும், அதற்கு உள்ளே சென்று கொண்டிருக்கும் மனிதர்களும், அவர்களின் கார்களும், பைக்குகளும், உடுப்பும், மிடுக்கும், என்னை ஒரு புழு பூச்சி போல கூனிக் குறுகச் செய்து, என் தாழ்வு மனப்பான்மையை தூண்டிவிட்டுவிடும்! பிறகு, ஏன் தான் இப்படிப் பிறந்தேனோ என்பது போல வாட வேண்டி வரும். இதற்கு அந்தப் பக்கம் போகாமல் இருப்பதே நல்லது! ”துஷ்டனைக் கண்டால், தூர விலகு”, என்று சும்மாவா சொன்னார்கள். இந்த ஆடம்பரமும், பகட்டும் தான் எனக்கு துஷ்டன்!

ஸ்டேசனில் லோக்கல் ட்ரெயின் டிக்கெட் எடுத்தேன், ரயில் வரக் காத்திருந்தேன். வந்தது ஐந்து நிமிடத்தில், கூட்டம், ஒரே கூட்டம், தொங்கிக் கொண்டு தான் வந்தார்கள், நானும் லேடீஸ் கம்பாட்மெண்ட்டில் ஏறி, இருக்கமாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டேன்! இப்படி சாகசம் எல்லாம் செய்வேன் என்று ஊரில் இருக்கும் போது நான் கனவிலும் நினைத்ததில்லை! ஊரில் இருக்கையில், பேருந்தின் படிப் பக்கம் நிக்கவே பதறுவேன். ஆனால், இந்த ஊர், என்னை ரயிலில் தொங்கும் அளவுக்கு மாற்றிவிட்டிருக்கிறது. எனக்கே என் மீது ஆச்சரியம்! இந்த மாற்றம் எல்லாம், நல்லதா கெட்டதா என்று கூட எனக்குப் புரியவில்லை!

இறங்க வேண்டிய ஸ்டேஸன் வந்துவிட்டது, இறங்கினேன். வேறு ஒரு ரயில் மாறி எக்மோர் செல்ல வேண்டும், மாறினேன். அதிஷ்ட வசமாக இந்த ரயிலில் கூட்டம் இல்லை. ஏதோ ஒரு கம்பாட்மெண்ட்டில் ஏறினேன். ஏறி உட்கார்ந்த பிறகு தான் கவனித்தேன், அந்தக் கம்பாட்மெண்ட்டில் பெண்களே இல்லை என்று! ஆண்கள் கம்பாட்மெண்ட் என்று ஒன்று உண்டா என்ன? எனக்குத் தெரிந்து இல்லை! ஒரு மாதிரி இருந்தது எனக்கு, எழுந்து வந்து கதவோரம் நின்று கொண்டேன்.

எக்மோர் வந்தது! இறங்கினேன். காத்துக் கொண்டு இருந்தேன் என் ரயிலுக்காக. போன் அடித்தது! “kadangaari calling”, பளிச் பளிச் என போனில் தெரிந்தது! இவ்வளவு நேரம் அந்த அம்மாவை மறந்து இருந்தேன், “ச்ச,..” எடுப்போமா வேண்டாமா? திட்டுவார் எப்படியும். சரி எடுப்போம் என்று மனதை தயார் செய்து கொண்டு எடுத்தேன்.

“ஏ, என்னடி, ஆளக் காணோம்! ஓடிட்டியா? காசு எனக்கு இன்னிக்கு வந்தாகணும். எப்போ வருவ?”

”நான் ஊருக்குப் போய்கிட்டு இருக்கேன், வந்ததும் ரெண்டு நாள்ல குடுத்தற்றேன்…”

கண்டபடி கத்தி, நான் ஊரிலிருந்து வரும் தினம், நானே போய் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வைத்தார்.

”பணத்துக்கு எங்க போறது?”, தீவிரமாக யோசித்துக் கொண்டே இருக்கையில் என் ரயில் வந்தது. ஏறி அமர்ந்தேன். டிக்கெட் காட்டிவிட்டு, மேலே ஏறிப் படுத்தேன். யோசித்துக் கொண்டே இருந்தேன். எப்படித் தூங்கிப் போனேன் என்றே தெரியவில்லை.

காலையில் அலாரம் வைத்திருந்தது அடித்து, பதறிப் போய் எழுந்தேன், பக்கத்தில் தூங்குபவர்களுக்குத் தொல்லையாக இருந்திருக்குமோ, என் அலாரம் சத்தம்? இல்லை, இருந்ததாகத் தெரியவில்லை, எல்லோரும் குரட்டைவிட்டுக் கொண்டிருந்தார்கள்.

எங்கோ நின்றது, அடடா, விருதாச்சலம்! இரவு 12.40க்கு வரவேண்டிய ஊரே இப்போது தான் காலை ஐந்து மணிக்கு வருகிறது! இதற்கு மேல் நான் எங்கு தூங்குவதற்கு? கீழே “Side lower birth” ஒன்று காலியாக இருந்தது, யாரும் இல்லை! நன்றாக கால் நீட்டி உட்கார்ந்து, வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். லேசாகத் தூரல் விழுந்து கொண்டிருந்தது, எனக்கு மழையில் நனையப் பிடிக்காது, இருந்தபோதும், தூத்தல் பிடிக்கும்! அதுவும், நனையாமல் ரசிக்க மிகவும் பிடிக்கும்.
இதுவரை ரயில் பயணத்தில், அதிகாலையில் இப்படி வேடிக்கை பார்க்கும் வாய்ப்பே எனக்குக் கிடத்ததில்லை. இன்று தான் முதல் முறை! பச்சை பசேல் என வயல்கள் என்ன, தோட்டங்கள் என்ன, புல் தரைகள், மாடு, ஆடு, ஆறு, குட்டை, குளம், எத்தனை எத்தனையோ! ஒரு நிமிடம், ”இத்தனை அழகான இடங்களைப் பார்க்காமல் இத்தனை நாள் இந்தச் சென்னை ஊரில் கிடந்தோமே”, என்று தோன்றியது.

ரயிலில் இருந்த மற்றவர்கள், ஒவ்வொருத்தராக எழுந்தார்கள், “எங்கம்மா இருக்கு?”, என்று சிலர் கேட்டார்கள். எல்லோரும் தங்கள் தங்கள் மொபைலுக்குச் சார்ஜ் போட ப்ளக் பாயிண்டுகளைத் தேடி ஓடினார்கள்! சிலர், ப்ளக் பாயிண்ட்டிற்குச் சண்டை வேறு! வெளியில், ஆடுகளும் மாடுகளும் ஆனந்தமாக, ஒற்றுமையாக, புற்களை ருசித்துக் கொண்டு இருந்தன!

பயணம் தொடர்ந்தது!                                                                                                                             

கருத்துகள்

  1. இது அப்படியே உங்களது தீபாவளிப் பயணத்தின் போது நடந்திருக்க வேண்டும் சரியா, என்ன நாயகியை ஒரு 15000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு அனுப்பிவிட்டீர்கள்... :-)

    ஈ.ஏ பீனிக்ஸ் பற்றி எழுதிய வரிகள் அட்டகாசம்... அதற்காகவே நான் அங்கேயே எல்லாம் செல்வதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ககக போங்க! கொஞ்சம் உண்மை, கொஞ்சம் பொய், கதை!
      நன்றி! :-)

      நீக்கு
  2. அருமையான கதை.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. மேலே படித்த சோகங்கள் கீழே இயற்கை தற்காலிகமாய் மாற்றி விட்டதே.....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்