முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#11

முந்தைய பாகங்கள்:


காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 |   #10 

ரயிலின் தாலாட்டில் அம்மாவின் நினைவு தான் வந்தது முரளிக்கு. சன்னலோரம் வீசும் குளிர்ந்த காற்று அம்மாவின் சுவாசம் தீண்டும் சுகம் தந்தது. வாகனங்களால் விஷமாகிப் போன வளியில் இன்னும் கொஞ்சம் ஈரம் காற்றில் மிஞ்சி தான் இருக்கிறது, அதற்கு சான்றாய் இருந்தது அந்த வாடைக் காற்று. நினைத்துப் பார்த்தான்.

தான் தூங்கிவிட்டதாக எண்ணி, தினமும் தன் நெத்தியில் முத்தமிடும், முத்தமிட்டவாறே அழும் தன் தாயின் அன்பு.

இனி மீண்டும் என்று கிடைக்கும் அந்த முத்தம்? தந்தை அருகில் இல்லாவிடினும், நத்தைக்குக் கூடு போல, ஆமைக்கு ஓடு போல, தன்னை வாழ்வின் எல்லாக் கட்டத்திலும் மூடி அணைத்துக் காத்து வந்த அன்னையின் பிரிவு அவனை வாட்டியது. நரகத்தின் மடியில் இருப்பது போல உணர்ந்தான் தாயின் பிரிவில்.

இதுவரை ஆசையாய் முத்தமிட்டு காலையில் எழுப்பிய தாயின் குரல் கேட்காமல் விடியலெல்லாம் வசந்தம் இழந்திடுமே!

உறங்கிடும் வேளையில் கூட அன்பாய் தலை கோதும் அந்த அன்புத் தீண்டல் இன்றி, இனி இரவுகள் இருண்டு போகுமே! சூனியம் ஆகுமே!

உணவில் சத்துக்களை விட, அன்பின் விகிதம் தான் அதிகம் இருந்தது இதுவரை, இனி அந்த அன்பின் விகிதம் சுத்தமாய்க் காணாமல் போகுமே..!

ஏங்கி ஏங்கி அழுகவே தொடங்கி இருந்தான் முரளி. தன்னைச் சுற்றி இருப்பவர்களை மறைந்து வாய் விட்டு அம்மா என்று அழத் தொடங்கி இருந்தான்.

புகையைக் கக்கியவாறு விரைந்து கொண்டு இருந்தது ரயில். விழுந்த கொண்டிருந்த சாரலை கிழித்துக் கொண்டு சென்றது.

இவன் தாயின் பிரிவுக்காய் அழுகிறான், மேகம் யாரின் பிரிவுக்காய் அழுததோ? மேகமும் தமிழ் நாட்டிலிருந்து தில்லிக்குக் கிளம்பி வந்ததோ இவனோடு? அதனால் தான் அழுகிறதோ தாய் மண்ணைப் பிரிந்தேனே என்று? தாயையும் தாய்மண்ணையும் பிரியும் நேரம் இருக்கும் துயரம், விவரிக்க முடியாதது.

மழையின் ஒரு துளி முகத்தில் தெளிக்க, சுற்றி அனைவரும் தன்னையே வினோதமாய்ப் பார்ப்பதை உணர்ந்து, அழுகையை நிறுத்தி, கால்ச்சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து விரித்து, முகம் துடைத்தான். அழுத்தமாய்த் துடைத்தான், பிரிவின் துயரம் துடைத்த துடைப்பில் ஓடட்டும் என்று எண்ணினானோ என்னவோ!

"சாய் சாய் காப்பி காப்பி..", இந்தி தொடங்கி இருந்தது. தமிழ் வாசம் குறைந்து இந்தி வாசம் காற்றில் உணர முடிந்தது முரளியால்.

நீண்ட நேரம் வாடைக் காற்றில் அழுதவாறு வந்ததால், லேசாக சளிப் பிடித்தார் போல உணர்ந்தான். தொண்டையில் உள்ளே ஈ சுற்றுவது போல இருந்தது, தலை பாரமாய் இருந்தது.

சிறுவன் ஒருவன் சன்னல் வெளியே கை நீட்டி மழையை ரசித்து விளையாடிக் கொண்டு இருந்தான் முரளியின் எதிரே.

"சாய் சாய்..", அந்தப் பக்கம் வந்த வியாபாரியிடம் ஒரு கோப்பை வாங்கினான்.

"பான்ச் ருபயா", ஐந்து விரல் நீட்டி ஒரு கோப்பை ஐந்து ரூபாய் என்றான் அந்த வியாபாரி.

ஐந்து ருபாய் கொடுத்து வாங்கிக் கொண்டான் முரளி. சிறிய கோப்பை, அதுவும் பிளாஸ்டிக் கோப்பை, அது ஐந்து ரூபாய், விலைவாசி அநியாயமாய்ப்பட்டது அவனுக்கு.

பருகியவாறு மீண்டும் நினைவில் மூழ்கினான்.

"அம்மா, எனக்கு குடிக்க எப்பவும் பால் தான் குடுக்றீங்க, இன்னிக்கு ஒரு நாள் தேநீர் வேணும்மா.. ஆசையா இருக்கு.."

"ஒருக்கக் குடிச்சுப் பழகிட்டா விடமுடியாதுடா., அதுவே பழக்கம் ஆகிடும், அம்மா இப்டி ஒருக்கனு பழகி தான் என்னால இப்போ விட முடில, பித்தம் டா இது, வேண்டாம்.."

"அம்மா இனி கேக்க மாட்டேன் ஒரே ஒரு தடவ.. ஒரே ஒரு தடவமா.."

"ம்ம்.. சரி ஒரு தடவ தான் கொஞ்சம் தான்.."

ஏழாவது படிக்கையில் அம்மாவிடம் ஒரு நாள் தேநீருக்காகக் கெஞ்சியது நினைவுக்கு வந்தது. அந்த சுவை நாவில் வந்தது.

நினைவுகளோடே பருகி முடித்தான்.

பயணம் தொடர்ந்தது தில்லியை நோக்கி, அம்மாவின் நினைவுப் பயணங்களோடு சேர்ந்தே!

---------------------------------------------------------------------

தில்லியில் எப்படி சமாளித்தான் முரளி? லட்சியம் அடைந்தானா? வாசிக்கலாம் அடுத்த பகுதியில்.

கருத்துகள்

  1. //உணவில் சத்துக்களை விட, அன்பின் விகிதம் தான் அதிகம் இருந்தது...
    //மேகம் யாரின் பிரிவுக்காய் அழுததோ? ரொம்ப புடிச்ச வரிகள்

    //இந்தி தொடங்கி இருந்தது. தமிழ் வாசம் குறைந்து இந்தி வாசம் காற்றில் உணர முடிந்தது முரளியால்.சென்னை வந்தாலே அப்படித் தான் இருக்கிறது :(

    அன்னையர் தின சிறப்பு பதிவா... அன்னையின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  2. தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா. ஆனால், அன்னையர் தின சிறப்புப் பதிவு என்று நினைத்து எழுதவில்லை. தோன்றியதைப் பதிந்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்